4. முஃமின்களுக்கான அல்லாஹ்வின் உதவி என்பது நேரடியாகக் கிடைக்கும் வெளிரங்க வெற்றி மாத்திரமல்ல. உள்ளங்களை உறுதிப்படுத்தி அவற்றில் அமைதியை ஏற்படுத்துவதும் வெற்றிதான். பத்ருப் போரைப் பற்றி அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான்.
(நபியே!) உம் இறைவன் மலக்குகளை நோக்கி: “நான் உங்களுடனே இருக்கிறேன்; ஆகவே, நீங்கள் முஃமின்களை உறுதிப்படுத்துங்கள்” என்று (வஹீ மூலம்) அறிவித்ததை நினைவு கூறும். 8:12
இதனால்தான் சிறு சிறு துன்பங்களின் போது பலர் வீழ்ந்துவிடும் போது மனிர்களால் தாங்க முடியாத பெரும் அல்லல்களை காஸா மக்கள் தாங்கிக்கொள்வதை நாம் பார்க்கலாம்.
5. மறுமையில்தான் கூலி, இவ்வுலகம் தற்காலிகமானது, ஏமாற்றத்தை தரக்கூடியது, அழிந்துபோகக் கூடியது, மறுமை நாளையில்தான் எவருக்கும் அநீதி இடம்பெறாமல் நீதியை நிலைநாட்டப்படும் என்பதை அல்குர்ஆனில் அல்லாஹ் நமக்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் தெரிவித்துள்ளான். நரகம், வேதனை, பாவிகளைத் தண்டித்தல் போன்றவற்றையும் கூறியுள்ளான். அங்குதான் முழுமையான நீதி கிடைக்கும். ஒரு கண்ணால் பார்ப்பவரால் இதனைப் புரிந்துகொள்ள முடியாது.
6. அல்லாஹ் விதித்த விதியை எக்காரணத்தைக்கொண்டும் மாற்ற முடியாது. உஹது யுத்தத்தில் பல நபித்தோழர்கள் மரணித்தபோது சில நயவஞ்சகர்கள் கூறினார்கள் அவர்கள் எம்மோடு இருந்திருந்தால் இறந்திருக்கவோ கொல்லப்பட்டிருக்கவோ மாட்டார்கள் என்று. அதற்கு பதிலளித்த அல்லாஹ் “முடியுமானால் உங்களை மரணத்திலிருந்து பாதுகாத்துக்கொள்ளுங்கள் பார்க்கலாம்” எனக் கூறி மரணம் உங்கள் மீது விதிக்கப்பட்டால் அது நிகழும் இடத்திற்கு நீங்கள் வீட்டுக்குள் இருந்தால் அங்கு சென்றுதான் ஆக வேண்டும் என மரணம் எங்கிருந்தாலும் வரத்தான் போகின்றது. போர் செய்யாமல் இருந்ததற்காக மரணம் வராமலிருக்காது எனக் கூறுகின்றான்.
இவ்வாறான தவறான எண்ணங்களால்தான் மனக்கவலைகள் அதிகரிக்கின்றன. அல்லாஹ் விதித்தது நடந்துதான் ஆகுமென்ற நம்பிக்கை இருந்தால் எவ்வளவு இன்னல்களையும் சகித்துக்கொள்ள முடியும்.
7. அதிக உயிர் மற்றும் உடமைச் சேதங்கள் நாம் தோல்வியுற்றோம் என்பதற்கான அடையாளமல்ல. மாறாக தோல்வி மனப்பான்மை கோழைத்தனம், பலவீனப்படுதல் போன்றவையே தோல்விக்கான அடையாளங்களாகும்.
(நம்பிக்கையாளர்களே!) நீங்கள் தைரியத்தை இழந்திட வேண்டாம். கவலைப்படவும் வேண்டாம். (உண்மையாகவே) நீங்கள் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால் நீங்கள்தான் மேலானவர்கள். 3:139.
மேலும் எத்தனையோ நபிமார்கள், அவர்களுடன் ரிப்பிய்யூன்கள் (என்னும் இறையடியார்களும்) பெருமளவில் சேர்ந்து (அல்லாஹ்வின் பாதையில்) போர் செய்தனர்; எனினும், அல்லாஹ்வின் பாதையில் அவர்களுக்கு ஏற்பட்ட துன்பங்களால் அவர்கள் தைரியம் இழந்து விடவில்லை, பலஹீனம் அடைந்து விடவுமில்லை; (எதிரிகளுக்குப்) பணிந்து விடவுமில்லை - அல்லாஹ் (இத்தகைய) பொறுமையாளர்களையே நேசிக்கின்றான். 3:146.
8. எப்படியிருந்தாலும் இறுதியில் இவ்வுலகில் நல்ல முடிவு மார்க்கத்தைப் பின்பற்றி அதற்கு உதவும் முஃமின்களுக்கே. நூஹ், இப்ராஹீம், ஹுத், ஸாலிஹ், லூத், மூஸா, ஈஸா மற்றும் முஹம்மத் அலை அவர்களுக்கு உதவியது போல் உதவி கிடைக்கும். இவ்வெற்றி அவர்களுக்கு மாத்திரமானதல்ல மாறாக சோதனையை வெற்றிகரமாகக் கடக்கும் அனைவருக்கும் பொதுவானதாகும்.
12:110. (நம்) தூதர்கள் நிச்சயமாக பொய்ப்படுத்தப்பட்டு விட்டார்கள் என்று எண்ணி நம்பிக்கை இழந்து விடும் பொழுது நமது உதவி அவர்களுக்கு வந்தது; நாம் நாடியவர்கள் காப்பாற்றப்பட்டனர்.
எங்களால் முடியுமானவற்றைச் செய்து அல்லாஹ் விரும்பும் விடயங்களை மேற்கொண்டால் அல்லாஹ் வாக்குறுதிக்கு மாற்றம் செய்யப்போவதில்லை.